கோங்குரா எனப்படும் புளிச்சக்கீரையை வைத்து சைவம், அசைவம் இரண்டிலும் ஆந்திராவில் செய்யப்படும் அயிட்டங்கள் எக்கச்சக்கம். அவற்றுள் முக்கியமானது கோங்குரா ஊறுகாய். அதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்…
தேவையானவை:
புளிச்சகீரை – 2 கட்டு
புளி – சிறிய எலுமிச்சம்பழ அளவு
மிளகாய்தூள் – 2லிருந்து 3 டேபிள்ஸ்பூன்
கடுகுத்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
பூண்டு – 8 பல் (விருப்பப்பட்டால்)
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
உப்பு – ருசிக்கேற்ப.
தாளிக்க:
நல்லெண்ணெய் – ஒன்றரை கப்
கடுகு – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6 (இரண்டாகக் கிள்ளியது).
செய்முறை:
கீரையின் இலைகளை ஆய்ந்து சுத்தமாகக் கழுவி, ஈரம் போகத் துடைத்து, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பூண்டை தோலுரித்து, பொடியாக நறுக்குங்கள். புளியை ஒரு கப் கொதிக்கும் நீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, பூண்டு சேருங்கள். பூண்டு சிறிது வதங்கியதும் கீரையை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். கீரை நன்கு வதங்கியதும் புளித் தண்ணீர், மிளகாய்தூள், உப்பு சேர்த்து கீரை நன்கு சுருளும் வரை கிளறி இறக்குங்கள். ஆந்திரத்தில் இந்த ஊறுகாய்க்கு பல்வேறு செய்முறைகள் உள்ளன.
இது அவசரத்துக்கு செய்யக்கூடியது. விருப்பம் உள்ளவர்கள், கடுகுடன் கடலைப்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.
Thank you