சிறப்புக் கட்டுரை
ஞா.கலையரசி
கண்ணாடிக்கூரை (GLASS CEILING) என்றால் என்ன?
மிகப் பெரிய வணிக நிறுவனங்களிலும், பன்னாட்டுக் கம்பெனிகளிலும் மிக உயர்ந்த நிர்வாகப் பதவிகளுக்கான ஏணியில், பெண்கள் எவ்வளவு தான் திறமைசாலிகளாக இருந்தாலும், சாதனையாளர்களாக இருந்தாலும் பாதிக்கு மேல் ஆண்களுக்கிணையாக ஏற முடியாமல், தடுக்கும் சுவரைத் தான், கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரையாக உருவகப்படுத்துகிறார்கள்.இதனைத் தடுப்புச்சுவர் அல்லது முட்டுக்கட்டை என்றும் பொருள் கொள்ளலாம்.
1971 ஆம் ஆண்டில் குளோரியா ஸ்டீனெம் (Gloria Steinem) என்பவர் தாம், மிஸ் (MS) இதழில் முதன்முதலில் இச்சொற்களைப் பயன்படுத்தினார் என்று சிலரும்

1979 ல் நடந்த ஹூலெட் பாக்கார்டு (HEWLETT PACKARD) கம்பெனியில் நடந்த பெண்களின் எழுத்துரிமை குறித்த மாநாட்டில் இந்தத் தடுப்புச் சுவர் பற்றி முதன்முதலாகப் பேசப்பட்டது; கண்ணாடிக்கூரை என்ற சொல்லை உருவாக்கியவர் லாரன்சும் (LAWRENCE) ஹூலெட் (HEWLETT) மேலாளர் மரியான் ஷ்ரெபர் (MARIANNE SCHREIBER)ஆகியோர் என்று சிலரும்
இச்சொல்லாக்கத்தை முதலில் உருவாக்கியவர் யார் என்பது பற்றி இணையத்தில் வெவ்வேறு கருத்துக்கள் உலவுகின்றன என்பதால், இது பற்றிய விரிவான ஆய்வில் நாம் இறங்க வேண்டாம்.
1984 ல் ‘வேலை செய்யும் பெண்கள்,’ இதழ் (Working women magazine) என்ற இதழின் முன்னாள் ஆசிரியரான கே பிர்யான்ட் (Gay Bryant)என்பவர், ‘குடும்ப வட்டம்,’ (Family circle) என்ற பத்திரிக்கையில் இவ்வாறு எழுதினார்:-
“உயர் நிர்வாகப் பொறுப்புகளுக்குப் பெண்கள் ஒரு கட்டம் வரை தான் போகமுடிகிறது; அதை நான் கண்ணாடிக்கூரை என்பேன். நடுத்தர பொறுப்பு வகிக்கும் இவர்களால், அதற்கு மேல் போக வழியின்றி நின்றுவிடுகிறார்கள். அதன் பிறகு சிலர் தங்கள் சொந்த வியாபாரத்தைப் பார்க்கப் போய்விடுகிறார்கள்; மற்றவர்கள் தம் குடும்பத்தைக் கவனிக்கத் தலைப்படுகிறார்கள்.”
அலுவலகங்களில், நிறுவனங்களில் துவக்கத்தில் ஆண்களுக்கிணையாகப் போட்டி போட்டு மளமளவென்று இடைநிலை வரை அலுவலக ஏணியில் ஏறி வரும் பெண்கள், அதற்கு மேல் ஏற முடியாமல் பாதியிலேயே நின்றுவிடுவதேன்?
இவர்களுக்கு நம்பர் ஒன் ஆவதற்குரிய தகுதியில்லை; அதற்கேற்ற பன்முகத் திறமையில்லாதவர்கள்; மிக உயர்ந்த பதவியிலிருக்கும் போது நெருக்கடியான காலக்கட்டத்தில் யோசித்து, உடனுக்குடன் முடிவெடுக்கும் திறன் குறைந்தவர்கள்; பெண் புத்தி பின் புத்தி; மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் என்பதால், முடிவெடுப்பதில் தவறிழைக்க வாய்ப்புண்டு. எதிரிகளின் போட்டிகளை முறியடித்துக் கம்பெனியை வெற்றிகரமாக நடத்திச் செல்லும் வழியறியாதவர்கள்……
இப்படியெல்லாம் யோசித்துத் தான், பல தலைமுறைகளாக ஆண்களை மட்டுமே உயர்பதவிகளில் அமர்த்திய நிர்வாகம், பெண்ணை தலைமை பதவியில் நியமிக்கத் தயங்குகிறது. எனவே ஒரு கட்டத்துக்கு மேலே ஏறுவதற்கான வாய்ப்பு, பெண் என்பதால் மட்டுமே மறுக்கப்படுகிறது.
ஆனால் நெருக்கடியான காலக்கட்டத்தில், உடனுக்குடன் முடிவெடுத்து குடும்பத்தைத் திறம்பட நடத்துபவர்கள் பெண்கள் என்பதால், இவர்களுக்கு நிர்வாகத் திறமை இரத்தத்திலேயே ஊறியிருக்கிறது என்பது தான் உண்மை. பலசமயங்களில் அஷ்டாவதனியாகச் செயல்படும் பெண்ணுக்கு ஒரு கம்பெனியை நிர்வகிப்பதா கடினம்?
உடல் வலிமை குறைந்தவள் பெண் என்பது உண்மை தான்; ஆனால் மனவலிமையில் ஆண்களை மிஞ்சுபவள். நிதி மேலாண்மைக்கும் இவள் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெறத் தேவையில்லை. எல்லாக்குடும்பத்திலேயும் இவள் தானே நிதியமைச்சர்! பட்ஜெட்டில் துண்டு விழாமல் வரவுக்குள் செலவைக் கட்டுப்படுத்தித் திட்டமிட்டுச் சேமித்து முதலீடு பண்ணி வருமானத்தைப் பெருக்கிச் சாதனை பண்ணுபவள் பெண் தானே?
அதனால் தான் பட்டுக்கோட்டையார் பாடினார்:-
“சேர்த்த பணத்தைச் சிக்கனமாச்
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில
கொடுத்துப் போடு
சின்னக்கண்ணு
அவங்க ஆறு நூறு ஆக்குவாங்க
செல்லக்கண்ணு”
அண்மை காலத்தில் நிர்வாகம், (IAS) இஞ்சீனியரிங், வங்கித் துறைகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இவர்கள் இந்தத் தடுப்புச் சுவரை இடித்துத் தள்ளி, ஏணியில் மேலேறி சாதனை படைக்கத் துவங்கியுள்ளனர்.
எடுத்துக்காட்டாக இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பாரம்பரிய மிக்க பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பெண் சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா. இவர் தலைமையில் வங்கி பெருமையுடன் பீடு நடை போடுகிறது. நைனா லால் கித்வை, (ஹெச்.எஸ்.பி.சி), சந்தா கோச்சார் (ஐ.சி.ஐ.சி.ஐ), ஷிகா ஷர்மா (ஆக்சிஸ் வங்கி), விஜயலஷ்மி ஐயர் (பாங்க் ஆப் இந்தியா) அர்ச்சனா பார்கவ் (யுனைடெட் பாங்க்) என வங்கிகளில் மிகப் பெரிய பொறுப்பு வகித்த, வகிக்கும், பெண்களின் பட்டியல் நீள்கிறது
கம்பெனியில் உயர்மட்டத்தில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அதன் நிதி மேலாண்மை செயல் திறன் மிக்கதாக இருக்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றனவாம். மேலும் 2007ல் நியூயார்க்கில் நடந்த ஒரு ஆய்வு, ஃபார்ச்சூன் (FORTUNE) 500 நிறுவனங்களில், நிர்வாகக்குழுக்களில் பெண்கள் 25 சதவிகிதத்திற்கு மேல் இருந்த அமைப்புகளின் செயல்பாடு, பல கோணங்களிலும் இதர நிறுவனங்களை விட மேம்பட்டு இருந்ததாகக் கூறுகிறது.
இதற்கெல்லாம் ஆராய்ச்சியே தேவையில்லை. வீட்டில் மனைவியாக அம்மாவாக குடும்பத்தலைவியாக பலதரப்பட்ட கதாபாத்திரங்களை அனாயாசமாகக் கையாளும் பெண்ணுக்கு இயற்கையிலேயே நெருக்கடிகளைத் தீர்க்கக்கூடிய அறிவும், தலைமையேற்று நடத்தக்கூடிய திறனும், பலருடன் இனிமையாக எளிதில் பழகக் கூடிய சுபாவமும் இயல்பாகவே அமைந்துள்ளன.
சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மை, அவளுடன் பணியாற்றும் ஊழியர்களுடன் நல்லதொரு பிணைப்பை ஏற்படுத்தி கம்பெனியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிப் பழக்கப்பட்ட பெண்களுக்கு நிறுவனங்களின் சந்தையைப் பற்றிய புரிதலும் இருக்கும் என்பதால் அவர்களுடைய பங்களிப்பு நிச்சயம் நிறுவனத்துக்குப் பயனுள்ளதாகவே முடியும்.
தற்போது நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, பெரிய வர்த்தக நிறுவனங்களிலும் பெண்கள் தலைமை பதவியை எட்டி வருவதால் இக்கண்ணாடிக் கூரையில் விரிசல் விழத்துவங்கியுள்ளது. அர்ப்பணிப்பு குணம் நிறைந்த சாதனை பெண்டிரின் கடும் உழைப்பினாலும் முயற்சியாலும் முழுவதுமாக இது தகர்ந்து விழும் நாள் வெகு தூரத்தில்லை.
“கண்ணாடிக்கூரையில் விரிசல் விழுந்து விட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய கம்பெனிகளின் மேல்மட்ட பதவிகளைப் பெண்கள் வகிக்கப் போகிறார்கள்; .இனிமேல் கண்ணாடிக்கூரை இல்லை; நீல வானம் மட்டுமே,” என்கிறார் பிரியா செட்டி ராஜகோபால், (Vice President & Client Partner, Stanton Chase International).
கட்டுரையாளர் ஞா.கலையரசி வலைப்பதிவர், வங்கியில் பணியாற்றுகிறார்.
நமது கட்டுரையாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்! வீட்டிலும் சமூகத்திலும் பெண்களுக்கு சம்மான அங்கீகாரம் கிடைக்க அனைவரும் தம்மால் இயன்ற முன்னுடுத்தலைச் செய்ய வேண்டும் என்று நான்கு பெண்கள் வலியுறுத்துகிறோம்!
மிக அருமையான பகிர்வு மகளிர் அனைவரும் படித்து உணரவேண்டிய கருத்துக்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
அருமையான பதிவு என்று பாராட்டியதற்கும், மகளிர் தின வாழ்த்துக்கும் மிக்க நன்றி விஜி!
மகளிர் தினத்துக்கேற்ற சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.
\\பலசமயங்களில் அஷ்டாவதனியாகச் செயல்படும் பெண்ணுக்கு ஒரு கம்பெனியை நிர்வகிப்பதா கடினம்?\\
சரியான கேள்வி. கணவனையும் குழந்தைகளையும் பேணி, சுற்றங்களை அரவணைத்து, வீட்டைப் பராமரித்து, வரவு செலவுகளைப்பார்த்து, முறையாக நிர்வாகம் செய்யும் திறமை ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உண்டு என்பது மறுக்கமுடியாத உண்மை. வாய்ப்புகள் கிடைக்காததாலேயே பல பெண்களின் திறமைகள் சிறு வட்டத்துக்குள் முடங்கிப்போய்க் கிடக்கின்றன. உரிய வாய்ப்புகள் கிடைத்தால் ஒவ்வொருவரும் தங்களால் இயன்றளவு சாதனை படைப்பார்கள். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.
ஆம் கீதா! சரியான வாய்ப்பில்லாததாலேயே பலரின் திறமை வெளியே தெரியாமல் நான்கு சுவர்களுக்குள் முடக்கப்படுகின்றன. விரிவான கருத்துரைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கீதா!
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
சிறந்த பதிவு என்று பாராட்டியமைக்கு மிகவும் நன்றி சார்!
என் எண்ணத்தின் வண்ணங்களாக ஒன்று உறைக்கிறேன்…
பெண்கள் தினம் சிறப்பாக வாழ்த்துவதை விட அவர்கள் வாழ வாழ்த்துவதே மகத்துவம்… பெண்மை வாழ்க … பெண்கள் முன்னேற்றத்தின் விடிவெள்ளிகள் இது அமெரிக்கா அடுத்த பெண் அதிபரை கொண்டு உலகம் போற்றும்… வாழ்க மனிதத்துவம் வளர்க சமத்துவம்…
ஜெய்ஹிந்த்…
பெண்மை வாழ்க என்று வாழ்த்தியமைக்கு மிகவும் நன்றி சார்!
வணக்கத்தோடு சிறு விண்ணப்பம் கலையரசி அவர்களுக்கு… நான் நதிகள் இணைப்பு குறித்த பக்கம் முகநூலில் (facebook ~ தேசிய நதிநீர் இணைப்பு திட்டம்) துவங்கி என்னால் இயன்ற விழிப்புணர்வு இளைய சமுதாயம் வழி கொண்டு செய்து வருகிறேன்…
நேரம் இருந்தால் உங்கள் நல்ல உள்ளம் சிறிது அப்பக்கம் வந்து நதிகள் இணைப்பின் முக்கியத்துவம் தங்களாலும் 4 பேர் விழிப்படையட்டுமே…
நீரின்றி அமையா உலகு ~ தங்களை போன்றவர்கள் உணர்த்துவதால் இன்னும் வேகத்தோடு விழிப்படையும்…
வணங்கி வாழ்த்துகிறேன்…
அருமையான பகிர்வு வாழ்த்துகள்
அருமையான பகிர்வு என்ற பாராட்டுக்கு மிகவும் மகேஸ்வரி!