தமிழக அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை ஆணையம் கோரி ஆளுனரிடம் வரும் 4ஆம் தேதி பா.ம.க. மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாமக வெளியிடப்பட்ட அறிக்கையில்
தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல்கள் அதிகரித்து விட்டன. அதுமட்டுமின்றி, கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளை தொடர்பான விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை தவிர மற்ற ஊழல்கள் குறித்த தகவல்களையும் திரட்டியுள்ள பாமக, தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் 04.02.2015 புதன்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞர் அணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய பா.ம.க. குழு சென்னை கிண்டியிலுள்ள ஆளுனர் மாளிகையில் ஆளுனர் ரோசய்யாவை சந்தித்து அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் பற்றி விசாரணை ஆணையம் அமைக்கக் கோரும் மனுவை அளிக்க உள்ளது’என தெரிவிக்கப்பட்டுள்ளது.