இந்திய நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்தை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், நி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்
’தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் மத்திய அரசால் 1500 கோடி ரூபாய் செலவில் இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது முக்கியமான அறிவியல் திட்டம் ஆகும். பிரபஞ்சத்தின் கட்டமைப்பை அறிந்துகொள்ள உதவும் இந்தத் திட்டத்தால் இந்திய அறிவியல் வளர்ச்சிக்கும் இந்திய நாட்டிற்கும் பல பயன்கள் உண்டு. இந்த திட்டம் ஒரு ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டமே. இதனால் எந்த வித ஆபத்தான தொழில் உற்பத்தியும் நிகழாது. நியூட்ரினோ என்பது ஒரு அடிப்படை துகளாகும். இதன் குணங்களை அறிவதே இத்திட்டத்தின் நோக்கம். இதனை அறிவதன் மூலம் சூரியனை பற்றியும் பிரபஞ்சத்தின் பிறப்பைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியும். 200 விஞ்ஞானிகளும், 26 அறிவியல் நிறுவனங்களும் இதில் ஈடுபடுவர். இத்திட்ட வரைவு நமது விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. இதனை நிறைவேற்றுவதன் மூலம் நம் நாட்டு அறிவியல் வளர்ச்சி இயற்பியல் துறையில் மேம்படும். இத்திட்டத்தால் சுற்று சூழலுக்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது. இத்திட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னையும் கிடையாது. மொத்தம் 34 ஹெக்டேர்
நிலம் – பெரும்பாலும் புறம்போக்கு நிலம் தான் தேவைப்படும்.
இத்திட்டம் தேனி மாவட்ட வளர்ச்சிக்குப் பங்களிக்கும். அறிவியல் விழிப்புணர்வை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் மேம்படுத்த உதவும். இந்தியாவின் அறிவியல் தற்சார்புக்கு உதவும் இத்திட்டத்தை தேனி மாவட்டத்தில் அமைப்பதை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி வரவேற்கிறது. மக்களின் ஆதரவோடும், ஒத்துழைப்போடும் அமலாக்கப்பட்டு மாவட்ட மக்களுக்கும் இந்திய நாட்டிற்கும் பெரும் நன்மைகளை இத்திட்டம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தப் படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.