தன் மீதான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்தோ, நீதிபதி பற்றியோ யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கட்சியினருக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், அண்ணா வழியில், எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நான், அந்த இருவரின் வழியில் பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். எனது வழக்கு தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் விவரம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
என் மீதுள்ள பாசம், பற்று, அன்பின் காரணமாக, நீதிமன்றத் தீர்ப்பு குறித்தோ, தீர்ப்பு வழங்கிய நீதிபதி குறித்தோ, நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் குறித்தோ யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். நீதித் துறையின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் எந்தச் செயலிலும் யாரும் ஈடுபட வேண்டாம். யார் மீதும் எவ்விதக் குற்றச்சாட்டையும் சுமத்த வேண்டாம்.
யாரும் குறை கூற இடமளிக்காத வகையில் அமைதி காத்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை எப்பொழுதும் போல் செவ்வனே பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் என தமிழக மக்களையும், ஆதரவாளர்களையும், கட்சியினரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நீதிமன்றத்தில் நான் செய்துள்ள மேல்முறையீட்டில் எனக்கு நிச்சயம் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் ஜெயலலிதா.