2015-ஆம் ஆண்டுக்கான 87-ஆவது ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த அயல்நாட்டுத் திரைப்படங்களுக்கான பிரிவில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் “லயர்ஸ் டைஸ்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடிகை கீத்து மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நவாஸூதீன் சித்திக், கீதாஞ்சலி தாபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்திய-திபெத்திய எல்லைப்புற கிராமத்தைச் சேர்ந்த ஒரு தாய், காணாமல் போன தனது கணவனைத் தேடி தனது இளவயது மகளுடன் டெல்லிக்குச் செல்கிறாள். வழியில், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்வுப்பூர்வமாகக் கூறுவதே “லயர்ஸ் டைஸ்’ திரைப்படத்தின் கதை. இந்தப் படத்துக்காக நாயகி கீதாஞ்சலி தாபா, ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ஆகியோர் தேசிய விருது பெற்றனர்.
ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது குறித்து படத்தின் இயக்குநர் கீத்து மோகன்தாஸ், “இந்தத் தகவல் தெரிந்ததுமே பரவசமாகிவிட்டேன். இந்தப் பரிந்துரையை, என் படத்துக்குக் கிடைத்த மணிமகுடமாகக் கருதுகிறேன். “லயர்ஸ் டைஸூ’க்குப் போட்டியாக விளங்கிய மற்ற 29 படங்களும் சிறந்தவைதான்’’ என்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள கீத்து மோகன்தாஸ், நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் தமிழில் உருவான “நள தமயந்தி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.