
பிரபல ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தனுக்கு 2014ஆம் ஆண்டுக்கான லெனின் விருது வழங்கப்படவிருக்கிறது. இந்த விருதை சென்னையைச் சேர்ந்த தமிழ் ஸ்டுடியோ வழங்குகிறது. மாற்று திரைப்பட கலைஞர்களையும், சுயாதீன திரைப்பட கலைஞர்களையும் கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ மூலம் வழங்கப்படும் படத்தொகுப்பாளர் பீ. லெனின் பெயரிலான விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருதினர்களாக புத்ததேப் தாஸ் குப்தா (மேற்கு வங்க திரைப்பட இயக்குனர்), சஷி குமார் (சேர்மன், ஆசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்), திரைப்பட இயக்குனர் அம்ஷன் குமார், எழுத்தாளர் இமையம், எழுத்தாளர் அழகிய பெரியவன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இவர்களுடன் விருதை பெரும், ஆனந்த் பட்வர்தனும் பங்கேற்கிறார்.
‘இவர்கள் மட்டுமின்றி, தமிழ் சினிமாவில் இருந்து பல்வேறு முக்கியமான திரைப்பட இயக்குனர்களும், எழுத்தாளர்களும் பங்கேற்கவிருக்கிறார்கள். நிகழ்வில் புத்தர் கலைக்குழுவின் பறை இசை நிகழ்த்தப்படவிருக்கிறது’ தமிழ் ஸ்டுடியோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ந் தேதி, சென்னை வடபழனி ஆர்கேவி ஸ்டுடியோஸில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது.


1950 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த ஆனந்த் பட்வர்தன், இளங்கலையில் ஆங்கிலப் பாடத்தில் பட்டம் பெற்றார். அரசுக்கு எதிரான கலகக்குரலாகவே தொடர்ந்து தன்னுடைய ஆவணப்படங்களை எடுத்து வருபவர். இவரின் பெரும்பாலான ஆவணப்படங்களுக்கு மத்திய தணிக்கை குழு, சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது. ஆனால் நீதிமன்றத்தில் போராடி தன்னுடைய ஆவணப்படங்களில் ஒரு கட் கூட இல்லாமல், இதுவரை தொடந்து உலகம் முழுவதும் திரையிட்டு வருகிறார். 1995 இல் இவர் இயக்கிய Father Son and the Holy War என்கிற ஆவணப்படம், உலகின் முக்கியமான 50 ஆவணப்படங்களில் ஒன்றாக ஐரோப்பாவின் DOX இதழால் தெரிவு செய்யப்பட்டது. மார்க்சியம், காந்தியம், அம்பேத்கரியம் என முக்கியமான சிந்தனை பார்வைகளை கொண்டவர். தன்னுடைய எல்லா படங்களையும், இந்த சிந்தனை பார்வையின் அடிப்படையில் எடுத்து வருபவர். நான்கு முறை தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.


தான் ஒரு படைப்பாளி, தன்னுடைய வேலை படங்களை எடுப்பது மட்டுமே என்று நினைக்காமல், எடுக்கப்பட்ட தன்னுடைய படங்களுக்கு எதிராக அரசு அமைப்புகள் செய்யும் அத்தனை வேலைகளையும் முறியடித்து, தன்னுடைய படைப்பு நேர்மையானது, அதில் அரசின் தணிக்கை அமைப்பு எவ்விதத்திலும் தணிக்கை செய்யமுடியாது என்று தொடர்ந்து போராடி வருபர். போரும் அமைதியும் என்கிற இவரது ஆவணப்படம், ஓராண்டு காலம் தடை செய்யப்பட்டிருந்த சூழலிலும் நீதிமன்றத்தில் போராடி, மீண்டும் அந்த படத்தை இந்தியா முழுவதும் திரையிடும் அனுமதியை பெற்றார். சில ஆண்டுகளுக்கு இவர் இயக்கத்தில் வெளிவந்த ஜெய் பீம் காம்ரேட் ஆவணப்படம், தலித் அரசியலில் மிக முக்கியமான ஆவணமாகவே இருந்து வருகிறது. ஆவணப்படம் என்றாலும், அதன் வடிவம் குறித்தும், ஆனந்த பட்வர்தன் மிகுந்த தெளிவுடையவர். உலக அளவில், ஆவணப்பட இயக்குனர்களில், சம காலத்தில் ஆனந்த் பட்வர்தனே முதன்மையானவர்.