ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘எபோலா’ வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்நாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் மூலமாக எபோலா வைரஸ் காய்ச்சல் இங்கும் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்நோய் பரவாமல் தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
இதன்படி சென்னை விமான நிலையத்திலும் கண்காணிப்பு பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன. நேற்று இரவு நைஜீரியாவில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை வந்தது தெரிய வந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எபோலா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் காணப்படவில்லை என்று அரிவித்தார்கள். என்றாலும் அதை உறுதி செய்து கொள்வதற்காக ரத்த பரிசோதனை அறிக்கை புனேயில் உள்ள மருத்துவ ஆய்வுக் கூடத்துக்கு இ.மெயில் மூலம் அனுப்பப்பட்டது. ரத்த மாதிரிகளும் தனியாக புனே ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில் அவர் எபோலா நோயால் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்தது. அவரது உடலில் உள்ள உறுப்புகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று மதியம் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார்.