புதுவை கோ.சுகுமாறன்
தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகளை எழுதலாம் என உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் சென்ற 1994-ம் ஆண்டில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மதுரை வழக்கறிஞர் சோலை சுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தர். இம்மனு சென்ற பிப்ரவரி 2013-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை மறு சீராய்வு செய்யக் கோரி மனித உரிமைப் போராளியும், மூத்த வழக்கறிஞருமான பொ.இரத்தினம் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீது விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று உத்தரவுப் பிறப்பித்தனர்.
அதில் “1950-ம் ஆண்டின் அரசியல் சாசனத்தில் மத்திய ஆட்சி மொழிகள், மாநில ஆட்சி மொழிகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன் 345-வது பிரிவில் அந்தந்த மாநிலங்களில் மாநில மொழிகளை ஆட்சி மொழியாக பின்பற்ற சட்டம் கொண்டுவரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத் தில் 1956-ல் ஆட்சி மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976-ல் அந்தச் சட்டத்தில் கீழ் நீதிமன்றங்களில் சாட்சி விசாரணை தமிழில் நடைபெற வேண்டும், தீர்ப்புகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ரெங்கா தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. பின்னர், தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத கீழ் நீதிமன்ற நீதிபதிகள், தமிழில் தீர்ப்பு எழுத வேண்டும் என்ற உத்தரவில் தங்களுக்கு விதிவிலக்கு வழங்கக் கோரினர். இதையடுத்து ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவு ஆட்சி மொழிச் சட்டத்துக்கும், தமிழில்தான் தீர்ப்புகள், சாட்சிகள் விசாரணை நடைபெற வேண்டும் என்ற பிரிவுக்கும் எதிரானது. தமிழ் தெரியாதவர்கள் குறிப்பிட்ட நாள்களுக்குள் தமிழைக் கற்று தமிழில் தீர்ப்புகள் எழுத வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்ற உத்தரவு நிரந்தரமானதாக இருப்பதால் தமிழைக் கற்க வாய்ப்பு எழவில்லை. எனவே, கீழ் நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழை தாய் மொழியாக கொள்ளாத அரசு ஊழியர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என விதியுள்ளது. அந்த விதி நீதிபதிகளுக்கும் பொருந்தும்” எனக் கூறியுள்ளனர்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வரக் காரணமாக இருந்த மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், மேலவளவு – முருகேசன் கொலை வழக்கை நடத்தியவரும்கூட.
கட்டுரையாளர் மனித உரிமை செயல்பாட்டாளர்.