நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் அக்டோபர் 2-ஆம் தேதி சிறந்த எழுத்தாளர்களுக்கு முதன்மை விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், சிறந்த நூல்களுக்கான இலக்கிய விருதுகளாக தலா ரூ.10 ஆயிரம், கேடயம், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
நாவல், கட்டுரை (இலக்கிய ஆய்வு உள்பட), சிறுகதை மொழி பெயர்ப்பு, கணினித் தமிழ் இலக்கியம், சமூக சேவை, கவிதை, சிறந்த பத்திரிகையாளர் ஆகிய பிரிவுகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், ஏதேனும் ஒரு பிரிவில் நூலின் தரத்தின் அடிப்படையில் முதன்மை விருதும், பிற பிரிவுகளில் வரப்பெற்ற இலக்கியங்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்படுகின்றன.
முதன்மை விருதுக்கு தகுதியான படைப்புகள் தேர்வு செய்யப்படாவிட்டால், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பு வழங்கப்படும்.
இந்த அறக்கட்டளையின் 6-ஆம் ஆண்டு இலக்கிய விருதுகள், பரிசுகளுக்கு இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளிடம் இருந்துப் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. நூல்களின் முதல் பதிப்பு 2011 ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2013 டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வெளிவந்திருக்க வேண்டும். படைப்புகளின் இரு பிரதிகளுடன் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை
சி.ரங்கசாமி,
6-175 கே.ஜி.போஸ் அஞ்சல் நகர்,
போதுப்பட்டி கிளை அஞ்சல்,
நல்லிப்பாளையம் (வழி),
நாமக்கல் -637 003,
தமிழ்நாடு’ என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. நூல்களுடன் எழுத்தாளர்கள் சார்ந்த விவரங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். நூல்களைப் படைப்பாளிகள், பதிப்பகத்தாரும் அனுப்பலாம். படைப்புகளைத் தேர்வு செய்வது தொடர்பான இறுதி முடிவு அறக்கட்டளையைச் சார்ந்தது என்று இது குறித்து கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளைத் தலைவர் பொ.செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.
பயன்தரும் தகவல்
நம்மாளுகளே முந்திக்கொள்ளுங்கள்